இலங்கை
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது: ஆனால்..!
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது: ஆனால்..!
ரணசிங்க பிரேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்ட போதும் யாரும் வழக்கு தொடரவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தமக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து (17.11.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட் சபை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சிகள் ஒரு விதமாகப் பேசினர். பொருளாதார நெருக்கடி பிரச்சினையை இன்னொரு வகையில் பேசினர்.
எதிர்க்கட்சிகள் இரண்டு தீர்ப்புகளைப் பற்றி இரண்டு விதமாகப் பேசுகின்றனர். இது நாட்டுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் நீதித்துறையும் விமர்சிக்கப்படுகிறது. சாதகமான முடிவு கிடைத்தால் அதை வெளியில் காட்ட முயல்கின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாக மகிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க எங்களுக்கு யாருக்கும் உரிமை இல்லை. சபாநாயகர் அவர்களே, ரணசிங்க பிரேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது.
ஆனால் யாரும் வழக்கு தொடரவில்லை. வழக்கு போட்டால் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று சொல்வார்கள். 88/89இல் அரச சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது.
வீடுகள், வங்கிக் கொள்ளை, கொலைகள் என வழக்குப் பதிவு செய்தால், அவை பொருளாதாரத்தையும் பாதித்ததாக சொல்லப்படும். எனவே இதைப் பற்றி தவறாகச் சொல்ல வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.