இலங்கை

வடக்கு – கிழக்கில் சீன முதலீடு: எதிர்ப்பதற்கு தயார் – செல்வம் அடைக்கலநாதன்

Published

on

வடக்கு – கிழக்கில் சீன முதலீடு: எதிர்ப்பதற்கு தயார் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு, கிழக்கில் சீனாவினுடைய எந்த முதலீட்டையும் அனுமதிக்க முடியாது என்றும், அதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பி்ட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனாவினால் வீதிகள் போடப்பட்டது. ஆனால் வட்டி வீதம் கூடிய நிலையிலேயே தன்னுடைய இலாபம் கருதி இலங்கை அரசாங்கத்திற்கு சீன அரசாங்கம் இந்த வேலைகளை செய்து கொடுத்தது.

அதேபோல் போர்ட் சிட்டியயையும் சீனா தனக்கான ஒரு பிராந்திய இடமாக வைத்துக் கொண்டது. அதேநேரம் துறைமுகத்தின் ஒரு பகுதி சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் இப்படியாக ஒட்டுமொத்த இலங்கையின் வருமானத்தின் முக்காவாசி பங்கை வட்டி வீதமாக கட்டுவதற்கான நிலைமையை சீனா உருவாக்கியுள்ளது.

அதனால் தான் இப்போது பொருளாதார ரீதியாக நாங்கள் மீள முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இப்பொழுது சீனா மீண்டும் வடக்கு கிழக்கிலே, குறிப்பாக வடக்கை தன்னகத்தே கொண்டு வருவதற்கான நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுகின்றது.

எப்படி என்று சொன்னால், இங்கே தன்னுடைய இலாபம் கருதி என்னென்ன விடயங்களை கையாள முடியுமோ, அதை கையாளுகின்ற வகையில் இன்று பல விடயங்களை செயற்படுத்தி வருகின்றது.

சீனாவினுடைய தூதுவர் வடக்கில் பல இடங்களுக்கு விஜயம் செய்து உணவுப்பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதே நேரம் கடற்றொழிலாளர்களுக்கும் மீன் வலைகளை வழங்குகின்றார்.

ஆகவே சீனா நினைப்பது என்னவென்றால் கடற்றொழிலாளர்களை தன்னகத்தே கொண்டு வந்தால், வடக்கில் உள்ள கரையோர பகுதிகளில் தன்னுடைய இலாபம் கருதி அட்டைப்பண்ணை உட்பட ஏனைய விடயங்களை மேற்கொண்டு, வடக்கில் உள்ள முழுமையான நிலங்களை அபகரிக்கின்ற நிலை ஏற்படும்.

எங்களுடைய பிரதேசத்தை மையமாக கொண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்ற போது எங்களுடைய பிரதேசம் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

இந்தியாவுக்கும் எங்களுக்கும் இந்த கடற்றொழிலாளர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியாவை விட்டு நாங்கள் வேறு எந்த நாட்டின் பக்கமும் நிற்கின்ற வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றது.

ஏனென்றால் எங்களுக்கு பிரச்சினை என்றால் இந்தியா தான் முன்வருகின்ற ஒரு சூழல் இருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் இந்தியாவை பகைத்துக் கொண்டு அல்லது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள முரண்பாடுகள் காரணமாக வடக்குக் கிழக்கிலே பாதிப்பு ஏற்படுகின்ற சூழலை அனுமதிக்க முடியாது.

ஆகவே இந்த விடயத்தில் சீனத்தூதுவரின் வருகை, வடக்கில் எங்களுடைய கடற்றொழில் பகுதிகளில் இருக்கின்ற செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். எனவே அதற்கு அனுமதி வழங்க முடியாது என்பது என்னுடைய கருத்து” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version