இலங்கை

முல்லைத்தீவில் நூதனமான முறையில் பணம் அபகரிப்பு

Published

on

முல்லைத்தீவில் நூதனமான முறையில் பணம் அபகரிப்பு

முல்லைத்தீவு– விசுவடு கிழக்கு பகுதியில் நூதனமான முறையில் பொதுமக்களிடமிருந்து பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவரினால் இன்றையதினம் (04.11.2023) சிலரது வீடுகளிலிருந்து பணம் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் சில வீடுகளுக்கு சென்று கொடுப்பனவு பணம் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு வேலைப்பழு அதிகம் காணப்படுவதால் இன்றைய கணக்கினை முடிக்க வேண்டும் எனவும் எங்களை இப்பகுதியில் மக்களிடம் பணத்தை அறவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

சமுர்த்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமைவாகவே தான் இப்பகுதியில் மக்களின் பணத்தை பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் ஒருவர் தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சமுர்த்தி உத்தியோகத்தரிடம் கதைத்துவிட்டு சொல்கிறேன் என தொலைபேசியில் உரையாடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு மீண்டும் வீட்டு உரிமையாளரிடம் வந்து உங்களிடம் இருக்கின்ற 5000 ரூபாய் பணத்தை தாருங்கள் மிகுதி பணத்தை சமூர்தியில் எடுத்து நாளை தந்தால் மாத்திரமே உங்களது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டு உரிமையாளரும் சரி நாளைக்கு உங்களது பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து 5000 ரூபாய் பணத்தை ஒப்படைத்துள்ளார். இது போன்று இவர்கள் பலரிடம் பணம் வசூலித்து சென்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகத்தரிடம் வினவிய போது, இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் தெரியாது எனவும், எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இது போன்ற விடயங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version