இந்தியா

64 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது

Published

on

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி இந்திய மத்திய அரசு மீது தமிழகத்தின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாதம் 14ஆம் திகதியில் இருந்து நேற்றுமுன்தினம் வரை (28.10.2023) மாலை வரை எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த 64 கடற்றொழிலாளர்கள் பத்து படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 64 இந்திய மீனவர்களும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரும் தமிழகத்தின் அழுத்தங்களும் இந்திய மத்திய அரசு மீது அதிகரித்துள்ளன.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடற்றொழிலாளர்கள் 37 பேர் நேற்றுமுன்தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 கடற்றொழிலாளர்களை மூன்று படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களைத் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 14 கடற்றொழிலாளர்களை இரண்டு படகுகளுடன் கைது செய்த கடற்படையினர் அவர்களை மயிலிட்டித் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Exit mobile version