இலங்கை
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் ஆய்வு கப்பல்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் ஆய்வு கப்பல்
‘ஷி யான் 6’ எனும் சீனாவின் ஆய்வுக் கப்பல், ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்து சமுத்திரத்தில் இருந்த நிலையில் இன்று (25.10.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி கப்பல் தற்போது கொழும்புத் துறைமுகத்தின் எஸ்.ஏ. முனையத்தில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி குவென்ஷோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சீன ஆய்வுக் கப்பல் , கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்தது.
இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலமான Ninety East Ridge என அடையாளப்படுத்தப்படும் கடலின் முகடு வழியாகவும், பின்னர் இந்து சமுத்திரத்தின் பல பகுதிகளுக்கும் சீன ஆய்வுக் கப்பல் பயணித்தது.
இந்தியா தீவிர கவனம் செலுத்தியதால், கப்பல் பயணத்தின் ஆரம்பம் முதல் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.
கப்பலின் இலங்கைக்கான பயணம் ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம்பெறும் என கடந்த ஓகஸ்ட் மாதம் சீனாவிலிருந்து கப்பல் புறப்படுவதற்கு முன்னரே கடற்படையினர் அறிவித்திருந்தனர்.
எனினும், உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு இந்தியா வழங்கிய பதில் நடவடிக்கைகளால், சீன ஆராய்ச்சிக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவது தாமதமானது.
இதேவேளை, சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கடந்த மாதம் 25 ஆம் திகதி நியூயோர்க்கில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், திட்டமிட்ட தினத்திலேயே ‘ஷி யான் 6’ எனும் இந்த சீனாவின் ஆய்வுக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
பொருட்கள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக சீன கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘ஷி யான் 6’ கப்பலுக்குள் பிரவேசிப்பதற்கு, தமது நான்கு பிரதிநிதிகளுக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என நாரா (NARA) நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்களுக்கான திகதி நேற்று பிற்பகல் 2 மணி கடந்தும் வழங்கப்படவில்லை.
‘ஷி யான் 6’ கப்பலுடன் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக ருஹுணு பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது என நாரா நிறுவனம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு அந்த ஆய்வு நடவடிக்கைகளில் இருந்து விலகுகிறோம் என ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்தது.
28 அறிவியல் ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளும் 13 ஆய்வுக் குழுக்களுடன் இந்த கப்பல் 80 நாள்கள் கடலில் பயணிக்கும் என சீனா கூறியுள்ளது. இதன்போது, 12 ஆயிரம் கடல் மைல்களுக்கும் மேற்பட்ட பகுதிகள் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளன.