அரசியல்

சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர

Published

on

நாட்டில் எந்தவொரு பகுதியும் குறித்த ஒர் இனத்திற்கு பிரித்துக்கொடுக்கப்படவில்லை எனவும், திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையீடு செய்ய வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தேவையின்றி இந்த விவகாரத்தில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(20.10.2023) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“திவுலபத்தான கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பிலான கிராம உத்தியோகத்தர் பதிவுகளும் காணப்படுகிறது.

இந்த நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கு ஒவ்வொரு பகுதி என்று பிரித்துக் கொடுக்கப்படவில்லை.

அவ்வாறு செய்வது தவறான ஒரு விடயமாகும். இந்த கிராமத்தில் பௌத்த விகாரை தாக்கப்பட்டுள்ளது.

மக்கள் குடியிருந்த 19 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வாழ் மக்களுக்கு அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அனுமதி பத்திரங்களை வழங்கி இருந்தார்.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இவ்வாறு அனுமதி பத்திரங்களை வழங்கி இருந்தார்.

இந்த பகுதியில் இருந்து இவ்வாறான ஒரு பின்னணியில் சிங்கள மக்களை வெளியேற்றுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படும்.

மேலும் இது மீண்டும் தீவிரவாதத்தை தூண்டக்கூடிய ஒரு செயலாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் அங்கம் என்பது நாம் அறிந்த விடயமாகும்.

யாரும் அதனை இல்லை என்று சொல்லவில்லை. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதன் பின்னர் நாடாளுமன்றில் சத்திய பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் தமிழக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

நாம் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு ஒன்றை கூற விரும்புகின்றோம். தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். அமைதியாக இருங்கள்.

பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகள் எமக்கு தெரியும். எனவே மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம்.

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் நாம் கூறுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதையும் நான் பதிவு செய்கின்றேன்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்

இஸ்ரேல் பக்கமா அல்லது பாலஸ்தீன பக்கமா என்பதை விட இந்த தாக்குதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள்.

அரசியல் நோக்கங்களுக்காகவே பயங்கரவாதம் தலைதூக்குகின்றது.

இந்த பிரச்சினை எவ்வாறு உருவானது என்பதை நன்றாக ஆய்ந்து அறிந்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இதற்கு ஒரு தரப்பினால் இதற்கு தீர்வு வழங்கப்பட முடியாது.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version