இலங்கை
இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் அறிவிப்பு
இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் அறிவிப்பு
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இன்று முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்று வரவிருந்த கப்பல் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் கப்பல் சேவை இன்று (10.10.2023) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத தொழிநுட்ப காரணங்களால் குறித்த கப்பல் இன்று வராது எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சேவைக்கான டிக்கெட்டின் விலை இந்திய ரூபாய் 7500 முதல் 8000 வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அந்தத் தொகையை செலுத்தி பயணச் சீட்டைப் பெறுபவர் 40 கிலோகிராம் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் நபர் அல்லது இந்தியாவிலிருந்து இந்த நாட்டிற்கு வர விரும்பும் நபர் தொடர்புடைய பொதுவான சட்ட ஆவணங்களின் (விசா, கடவுச்சீட்டு) தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு இந்த பயணத்தை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் ஒரு வழி பயணத்திற்கு 3 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுவதுடன், 40 ஆண்டுகளுக்கு பின் இந்தியா, இலங்கை இடையே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.