இலங்கை

கோட்டாபயவின் விம்பமாக தோன்றிய ரணில்

Published

on

கோட்டாபயவின் விம்பமாக தோன்றிய ரணில்

இலங்கை தொடர்பான அரசியல் நிலைமைகளில் காணப்படும் கருப்பு முத்திரைதான் மனித உரிமை மீறல் செயற்பாடுகளாகும்.

2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் நடந்தேறிய கொடூர கொலைகளும், அதனோடு தொடர்புடைய மனித உரிமை மீறல்களும் இன்றுவரை சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசிற்கு எதிராக எதிரொலிக்கின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் தனது அரசியலை தந்திரமாக நகர்த்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் எண்ணங்கள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சர்வதேச விசாரணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு தனது பதிலை உரத்த குரலில் கோபத்துடன் வெளிப்படுத்தியிருந்தார் ரணில்.

இந்த காணொளியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த அவர், குறித்த நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக எச்சரித்த சம்பவம் இலங்கை தொடர்பில் சர்வதேச பார்வையில் இரு கசப்பு நிலையை தோற்றுவித்துள்ளது.

பல்வேறு கட்டங்களில் அவர் தமது பொறுமையை இழந்த நிலையில் பேசியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இலங்கையை மேற்கத்திய நாடுகள், இரண்டாம் வகுப்பாக பார்க்கிறதா? என்று கேள்வி எழுப்பினார் ரணில்.

ஒரு கட்டத்தில், நேர்காண்பவர் “முட்டாள்தனமாக பேசுகிறார்” என்று அவர் குற்றம் சாட்டியதுடன், போர் தொடர்பாக கூட சர்வதேச கண்காணிப்பாளர்களின் தேவையை இலங்கை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஒரு கட்டத்தில், நேர்காணலை நிறுத்துமாறும் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் நேர்காணலின் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாம் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டுடன் மாத்திரமே தொடர்பு கொண்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ரணிலின் உரையாடலானது, அரசியல் தரப்புக்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ”ரணில் ராஜபக்ச” என்ற பெயரை நினைவுபடுத்துகிறது.

காரணம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போன்றதொரு சர்வதேச ஊடகம் ஒன்றின் நேர்காணலில், போர் குற்ற விசாரணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இதே பாணியில் பதிலளித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவர், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இன்றுவரை இலங்கை அரசாங்கத்தின் மீதும், கோட்டாபய ராஜபக்ச மீதும் சில அரசியல் தரப்புக்களால் பகிரங்கப்படுத்தப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கோட்டாபய ராஜபக்ச பல்வேறு கட்டங்களில் பொறுமையை இழந்து பதிலளித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முறையில் மரணதண்டனைக்கு உத்தரவிட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கூற்றுக்கள் குறித்து கேட்டபோது, பொன்சேகாவை தேசத்துரோகக் குற்றம் சாட்டி அவரை தூக்கிலிடப் போவதாக அந்த சந்தர்பத்தில் தெரிவித்திருந்தார்.

குறித்த நேர்காணலில் ”நீங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளீர்கள் என நீங்கள் நம்பினால், வெள்ளைக் கொடியை அசைத்து சரணடைய முயல்பவர்களைச் சுடச் சொல்லி உங்கள் மூத்த அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட அது உங்களை அனுமதித்திருக்காது அல்லவா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த கோட்டாபய, ” இல்லை நான் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. அதை யாரும் செய்யவில்லை. அது அரசியல் பிரச்சினைகள், அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்.

அவர் தனது தனிப்பட்ட இலாபத்திற்காக போட்டியிட்டார். அவரை இதற்குள் இழுக்காதீர்கள்.” என தெரிவித்திருந்தார்.

ஜெனரல் பொன்சேகா, நீங்கள் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறினார் அதற்கு உங்கள் பதில் என்ன? என்று கோட்டாபயவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், அது ஒரு அரசியல் விளையாட்டு. அவர் பொய் சொல்கிறார். அது தேசத்துரோகம். அதை எப்படி சொல்ல முடியும்? அவர் எப்படி பொய் சொல்ல முடியும்? அவர் எப்படி நாட்டுக்கு துரோகம் செய்ய முடியும்? வீரர்களை காட்டிக்கொடுக்கிறது. அது குற்றமில்லையா? அது தேசத்துரோகமல்லவா? இவ்வாறு அவர் பதிலளித்திருந்தார்.

இந்த விடயத்தில் இலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை ஒரே பார்வையில் நோக்குவது வெளிப்படுகிறது.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல் விடயங்களுக்கான தீர்வை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என சர்வதேச தரப்புக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கை அரசியல் பார்வையில் அவை நீதிக்கு அப்பாற்பட்டதாக காணபடுகின்றன.

2009 முற்பட்ட போர் சூழ்நிலைகளுக்கும் அதன் தசாப்தம் கடந்த பின் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகையில், அதனை ஆட்சிபீடம் ஏறும் தலைவர்கள் கடந்து போவதே நிதர்சனமாகி போகிறது.

Exit mobile version