இலங்கை

கோட்டாபய மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

Published

on

கோட்டாபய மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்

ஏன் என்று தெரியாது, மகிந்த ராஜபக்சவின் மீது எனக்கு தனிப்பட்ட ரீதியில் ஒரு ஈர்ப்பு உண்டு என பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் சிறையில் இருக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் என்னைப் பார்க்க வந்தனர்.

அது மாத்திரம் அல்லாமல் பசில் ராஜபக்ச, மனோ கணேசன் உள்ளிட்டோரும் என்னை வந்து சந்தித்தனர். அவர்களோடு அம்பாறையில் இருக்கும் எனது நண்பர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்துள்ளனர்.

நான் சிறையில் இருக்கும் போது பல ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்கள் உள்ளிட்டோரும் என்னை வந்து சந்தித்துள்ளனர்.

அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவின் ஆலோசகராக பசில் ராஜபக்ச இருந்தார். அப்போது அவரை எனக்கு உண்மையிலேயே தெரியாது.

இருந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பத்தில் முதலில் எனக்கு அறிமுகமானவர் கோட்டாபய ராஜபக்சதான். முன்னைய காலத்தில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் போது, எங்களுடைய மதத் தலைவர்களை சந்தித்து எம்மை சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதன் அடிப்படையில் நாங்கள் அவர்களை சந்தித்தோம். அவர்களுடைய அரசாங்கம் வந்தால் கிழக்கு மாகாணத்தில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அதேபோன்று 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் மகிந்த அணிக்கு ஆதரவளித்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு உதவினார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என பிள்ளையான் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

ராஜபக்ச நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும் நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version