இலங்கை

கஜேந்திரன் தாக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம்: மணிவண்ணன்

Published

on

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலிஸார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ்வாகன அணியோடு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலிஸார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ்வாகன அணியோடு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம்.

இந்த ஈன செயலை வன்மையாக கண்டிக்கின்றேன். உண்ணா நோன்பிருந்து அகிம்சை போர் தொடுத்து ஈகச்சாவடைந்ந உத்தமனை நினைவு கூர கூட இந்த மண்ணில் அனுமதி இல்லை என்பதை இது காட்டி நிற்கின்றது.

இச்செயல் இந்த நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதையும் தமிழ்மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதையும் பட்டவர்த்தனமாக காட்டுகின்றது.

இதனை சர்வதேசம் கண்டும் காணாதிருப்பது தான் வேதனையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version