இலங்கை

அக்கரைப்பற்றில் திலீபனின் வாகன ஊர்தி பவனியை மறித்து ஆர்ப்பாட்டம்

Published

on

அக்கரைப்பற்றில் திலீபனின் வாகன ஊர்தி பவனியை மறித்து ஆர்ப்பாட்டம்

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பவனியை மறித்து சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவமானது நேற்று (15.09.2023) மாலை 3 மணிக்கு அக்கரைப்பற்றில் பதிவாகியுள்ளது.

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு நேற்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரையில் திலீபனின் நினைவேந்தல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவிலில் இருந்து யாழ். நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் அருட்தந்தை சக்திவேல், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி காண்டீபன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னாரது உருவப்படத்தின் முன்னாள் ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வாகன ஊர்தியை ஆரம்பித்து வைத்தனர்.

பொத்துவிலில் இருந்து திருக்கோவில் வரையுமுள்ள கோமாரி, ஊறணி, சங்கமம்கண்டி திருக்கோவில் வரையும் வீதிகளில் காத்திருந்த மக்கள் ஊர்தி பவனியை வீதிகளில் மறித்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாக மாலை 5 மணியளவில் பயணித்த வாகன ஊர்திபவனியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில் திடீரென 7 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்துள்ளனர்.

மேலும் விடுதலைப் புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை எமது கிழக்கு மாகாண அமைதியான சமூகத்திற்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தியவாறு சிங்கக்கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் வீதியின் மற்றைய பகுதியால் வாகன ஊர்தியை வாகன சாரதி செலுத்தியதையடுத்து வாகன பவனியானது கல்முனை பாண்டிருப்பை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று (16.09.2023) களுவாஞ்சிக்குடியில் வாகன ஊர்திபவனி ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்குச் சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version