அரசியல்

அமைச்சர் பிரசன்ன ரணிலின் ஆளா..!

Published

on

அமைச்சர் பிரசன்ன ரணிலின் ஆளா..!

“நான் இப்போது ரணிலின் ஆள் என்று சிலர் கூற முற்படுகின்றனர். எனது பயணம் தொடர்பில் கம்பஹா மாவட்ட மக்களுக்குத் தெரியும்.” என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களின் பலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.

கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி, கட்சியை உருவாக்கி, கிராம அளவில் உறுப்பினர்களைச் சேர்க்கும் கட்சியல்ல இது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கிராமத்திலிருந்து பத்து உறுப்பினர்களைச் சேர்த்து, அந்த பத்து பேரை இன்னும் பத்து பேரை சேர்த்துக் கொள்ளச் சொல்லி, கிளைகளை உருவாக்கி வளர்க்கப்பட்டது.

இப்போது யார் கதையளந்தாலும் அன்று 2015இல் ஏற்பாடு செய்யப்பட்ட நுகேகொட மேடையில் ஏறுவதற்கு யாரும் இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச மாகாண முதலமைச்சர்களை விட்டு வெளியேறிய போது நான் மட்டுமே முதலமைச்சராக மேடையில் நின்றிருந்தேன்.

அந்தப் பலத்தை எனக்கு மேல் மாகாண சபை சில உறுப்பினர்களும் உள்ளூராட்சி சபைகளின் சில உறுப்பினர்களும் ஆதரவு தந்தார்கள். அப்போது அந்த அணி இல்லை என்றால் எனக்கு அந்தப் பலம் இருந்திருக்காது.

நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களால் மகிந்த காற்றின் கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் கிளைகளை நிறுவினர். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள எமக்கு கட்சியைப் பாதுகாக்கப் பெரும் உரிமை உள்ளது.

மகிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதாகக் கூறிய போது பஸில் ராஜபக்சவின் அமைப்பு கட்சியை நாடளாவிய ரீதியில் வழிநடத்தியது. அந்த அமைப்பு பலத்தினால்தான் ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகள் வெற்றி பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது.

துரதிஷ்டவசமாக இந்த நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. அது எங்களால் ஏற்படவில்லை. முப்பது வருட யுத்தத்தால் நாட்டின் பொருளாதாரம் அழிந்தது. கறுப்பு ஜூலை 83, 88/89 பயங்கரவாதம், போராட்டம் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் பொருளாதாரத்தை அழித்தன.

அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 88/89 பயங்கரவாதத்தை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது மக்களுக்கு நினைவிருக்கலாம். பின்னர், கொரோனாத் தொற்றுநோயால் முழு நாட்டையும் மூட வேண்டியிருந்தது. அப்போது நாட்டை மூட வேண்டாம் என்றார்கள்.

மீண்டும் நாட்டை திறக்க முற்பட்ட போது மக்கள் செத்து மடிவார்கள் என்று கூறி நாட்டைத் திறக்க வேண்டாம் என அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் பின்னர் கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தடுப்பூசிகளை வழங்கிய பின்பே நாட்டைத் திறந்தார்.

எனக்கு இப்போது அது நினைவில் இல்லை. நாட்டின் பொருளாதாரம் சரிந்தது எங்களால் அல்ல. ரஷ்ய – உக்ரைன் போரால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. கொரோனாத் தொற்றுநோய்க்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கியபோது போராட்டம் தொடங்கியது.

மகிந்தவும், கோட்டாபயவும் தமது பதவிகளை விட்டு விலகிய போது, நாட்டைக் பொறுப்பேற்குமாறு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களை அழைத்தோம். ஆனால், ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இந்தச் சவாலை ஏற்க முன் வந்தார்.

அந்த நேரத்தில், கட்சியாக நாங்கள் அவருக்கு உதவ முடிவு செய்தோம். அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் எம்மால் ஆக்க முடிந்தது. மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் நின்றனர்.

பொருட்கள் குறைவாக இருந்தன. ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு வருடத்துக்குள் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. அதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால், மக்கள் விரும்பாத சில முடிவுகளுக்கு நாம் கைதூக்க வேண்டியுள்ளது.

நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் கட்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நினைத்தோம். அன்று எமது அரசை அழித்தவர்கள் இன்று ஊடகங்களுக்கு வந்து ஒரு அறிக்கை விடுகின்றார்கள். இப்போது நான் ரணிலின் ஆள் என்று சிலர் கூற முற்படுகின்றனர்.

எனது பயணம் குறித்து கம்பஹா மாவட்ட மக்களுக்குத் தெரியும். எனது வெற்றியைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. நான் எப்போதும் மொட்டுவை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களிடம் சொன்னேன். மற்றபடி எனக்கு விருப்பு வாக்கு கேட்கவில்லை. நாம் இன்றும் மகிந்தவுக்காக நிற்கின்றோம்.

நாங்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவை நேசிக்கின்றோம். மகிந்த போரை முடித்து நாட்டை விடுவித்ததால் நாங்கள் அவரை நேசிக்கின்றோம். யார் என்ன சொன்னாலும் இந்தக் கட்சியைப் பாதுகாத்து முன்னேற்றுவது நமது பொறுப்பு.

ஆறு அடிகள் முன்னோக்கி வைக்கப் பார்த்து ஒரு அடி பின்னோக்கி வைத்தோம். எனவே, இந்தக் கட்சியை பலப்படுத்தினால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு கண்டிப்பாகத் தேவைப்படும். நாங்கள் அதற்காக அர்ப்பணித்துச் செயற்படுவோம்.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version