இலங்கை
இலங்கையில் மர்ம காய்ச்சல் – இருவர் மரணம்
இலங்கையில் மர்ம காய்ச்சல் – இருவர் மரணம்
குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கனேவத்த ஹிரிபிட்டிய கிரிந்திவெல்கால தொராதத்த குளத்தில் மீன் பிடித்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிரிந்திவெல்கால பிரதேசத்தைச் சேர்ந்த அமில அஜந்த குமார மற்றும் ஜீவன் சதுரங்க ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நாட்களில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்க பிரதேசவாசிகள் பழகியுள்ளனர். அதற்கமைய, ஏராளமான இளைஞர்கள் கடந்த வாரம் அந்த இடத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்றவர்களில் பதினொரு பேர் காய்ச்சல் காரணமாக ஹிரிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த இளைஞர்கள் சிலர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9ஆம் திகதி இருவர் உயிரிழந்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஞ்சங்கமுவ தெரிவித்தார்.
உயிரிழந்த இரு இளைஞர்களின் பிரேத பரிசோதனை குருநாகல் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர்களின் சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பில் உள்ள அரச மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கான குறிப்பிட்ட காரணங்களை கண்டறிய இவற்றினை அனுப்பியதாக வைத்தியர் சந்தன கஞ்சங்கமுவ குறிப்பிட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்டவர்களின் சுகவீனம் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டால், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அது தொடர்பான குறிப்பிட்ட நோயை கண்டறிய முடியும் என பிராந்திய சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில், ஏரியில் எஞ்சியிருக்கும் மீன்களும் இறந்து கிடப்பதால், அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அபாயகரமான நிலை தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சுகாதார அதிகாரியும் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு - tamilnaadi.com