இலங்கை
முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை
முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டாரா என்பதினை உறுதிசெய்யும் நோக்கிலேயே பகுப்பாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பாலகன் பாலச்சந்திரனின் மரண விசாரணை தொடர்பில் பகுப்பாய்வு செய்தவர்கள் சுடு கள நிபுணர்கள் ஆவர். பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான புகைப்படம் மற்றும் படுகொலை சம்பவத்தை உறுதி படுத்துவதற்காகவே இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் முல்லைதீவு மனிதப்புதைகுழி விவகார ஆய்வு நடவடிக்கைகளுக்கு இவ்வாறான பகுப்பாய்வுகள் தேவையில்லை. தொழிநுட்ப கருவிகளின் உதவியிலேயே இதனை மேற்கொள்ளலாம்.
முல்லைதீவு மனித புதைகுழி விவகாரதிற்கும் பாலச்சந்திரனின் மரண விசாரணனைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
மேலும், இந்தியா, 13 திருத்தச்சட்டம் என அனைவரும் அரசியலின் பின்னே செல்வதால், இவ்வாறான நமது உறவுகளின் மரணங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மறந்து விடுகிறார்கள்.
அத்தோடு, முல்லைதீவு மனிதப்புதைகுழி எச்சங்கள் காணாமலாக்கப்பட்டோரின் மாதிரிகளோடு பொருந்துமாக இருந்தால் அது நமக்கு கிடைத்த மிக பெரியதொரு ஆதாரம்.
இவ்வாறான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முடியும். அல்லது சர்வதேச பரிந்துரைகளை பெற முடியும்.
அத்தோடு காணாமலாக்கப்பட்டோரின் போராட்டமே தமிழ் மக்களின் உயிர்ப்பு போராட்டமாக காணப்படுகிறது.” என தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login