இலங்கை
பிரபல ஹோட்டலில் வழங்கப்பட்ட விசேட பயிற்சி!
பிரபல ஹோட்டலில் வழங்கப்பட்ட விசேட பயிற்சி!
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (06.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அதற்கமைய குறிப்பிட்டவொரு குழுவொன்று வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து, போராட்டத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கண்டி – அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் பயிற்சி பெற்றுள்ளமை தொடர்பான தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாறான குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு துறை உன்னிப்பான அவதானத்துடனேயே உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு புலனாய்வு பிரிவின் பலவீனமே காரணம் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது. அண்மையில் அடிப்படைவாத அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதிகள் வடக்கிலுள்ள விகாரையொன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்போம்.
உண்மையில் மக்கள் மத்தியில் எவ்வித மத பிரிவினைவாதமும் இல்லை. அடிப்படைவாத செயற்பாடுகள், கருத்துக்கள் முன்வைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல்வாதிகளே காணப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆவா குழுக்கள், பாதாள உலக குழுக்கள் என்பவற்றின் செயற்பாடுகள் கடந்த இரு மாதங்களாக அதிகரித்துக் காணப்பட்டது. எனினும் முப்படை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடுகள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login