அரசியல்
யாழில் ஆரம்பமாகியது ‘பாசத்திற்கான யாத்திரை’
அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக ‘பாசத்திற்கான யாத்திரை’ எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து பேரணி ஆரம்பமாகியுள்ளது.
ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தலைமையில் நல்லூர் ஆலயத்தில், புதன்கிழமை (19) காலை விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ் பஸ் நிலையம் முன்பாக கையெழுத்துப் பெறும் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து இன்று (19) ஆரம்பமாகிய ‘பாசத்திற்கான யாத்திரை’ கொழும்பை 21 ஆம் திகதி சென்றடையும். அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் பாசத்திற்கான யாத்திரை இறுதிநாள் நிகழ்வுகள் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login