அரசியல்
அன்னை பூபதியின் 35வது நினைவுதின ஊர்திப்பவனி!
அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊர்தி பவனியானது இன்று (16) நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நிவைிடத்திலிருந்து நண்பகல் 1.30 மணியளவில் ஆரம்பித்தது.
இவ் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கயேந்திரகுமார், கயேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.
இதேவேளை இன்றைய தினம் நல்லை ஆதீன முன்றலில் தமிழர் தொன்மையைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்ட இடத்தை நோக்கி நகர்ந்த ஊர்திக்கு
போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சைவ மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் போன்றோர் அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து நகரும் ஊர்திபவனியானது யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து கண்டி நெடுஞ்சாலையூடாக கிளிநொச்சியைச் சென்றடைந்து, அங்கிருந்து மாங்குளம் மல்லாவியூடாக நெடுங்கேனியை அடைந்து, அங்கிருந்து திருகோணமலையூடாக மட்டக்களப்பிலுள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தை எதிர்வரும் 19ம் திகதி சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய முதலாம் நாள் பவனியானது முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியோடு நிறைவடையவுள்ளது.
You must be logged in to post a comment Login