அரசியல்
முன்னாள் சபாநாயகருக்கு நாளை அஞ்சலி!!
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சருமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாளை (30) மு.ப 09.00 மணிக்கு பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய மு.ப 8.45 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. மு.ப 09.00 மணிக்கு மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் தாங்கிய வாகனத் தொடரணி பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை அடையவுள்ளது.
இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகம் குஷானீ ரோஹனதீர ஆகியோரால் பூதவுடல் பொறுப்பேற்கப்படும்.
பின்னர் படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர், உதவிப் படைக்கலசேவிதர் ஆகியோர் முன்னிலையில் செல்ல பூதவுடல் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற விசேட வைபவ மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
மு.ப 9.00 மணி முதல் மு.ப 10.00 மணி வரை அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காகப் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் எனச் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்றத்தில் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளார்.
மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள், முன்னாள் பணியாளர்கள் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த ஏனைய பணியாளர்களையும் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
1941ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி பிறந்த ஜோசப் மைக்கல் பெரேரா, இலங்கை பாராளுமன்றத்தின் 17வது சபாநாயகராக 2001ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி வரை சேவையாற்றியிருந்தார்.
1964-1967 ஜாஎல நகரச சபை உறுப்பினராக அரசியலுக்குள் நுழைந்த இவர் 1967-1970 ஜாஎல நகரசபை உப தலைவராக நியமிக்கப்பட்டார். 1970-1971 ஜாஎல நகர சபையின் தலைவராகவும், 1971-1976 எதிர்க்கட்சியின் முதற்கோலாசானாகப் பணியாற்றியிருந்தார். 1976-1977 முதலாவது தேசிய அரசப் பேரவைக்குத் தெரிவுசெய்யப்பட்ட அவர், 1977-1978 இரண்டாவது அரசப் பேரவைக்கும், 1978-1988 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன் பின்னர் இவர் 1989 முதல் 2015 வரை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், உள்நாட்டு அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தார்.
You must be logged in to post a comment Login