அரசியல்
தீர்வை முன்வைக்க திராணியற்றவர்களே சிங்களத் தலைவர்கள்!!
சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைக்க திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச சபைக்காக தமிழரசு கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வட்டாரம் -01, வட்டாரம் -02 ஆகியவற்றின் வேட்பாளர்கள்களின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“கடந்த காலத்தில் நோர்வே அனுசரணையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஜெனிவாவில் பல கட்ட பேச்சுக்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் தமிழர்கள் கொண்டிருந்த ஆயுத பலத்தை மையமாகக் கொண்டே நடைபெற்றுள்ளன. அந்த காலப்பகுதியில் நாங்கள் ஒரு பலமான சக்தியாக இருந்தோம்.
“நெடுந்தீவு பகுதி தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. இப்போதும் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
“தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி கடையர்கள் பெரும் அநியாயங்களை செய்தனர். நாங்கள் இந்தப் பிரதேசங்களில் காலடி கூட வைக்க முடியாத பகுதியாக இருந்தது. பாராளுமன்ற தேர்தலுக்காக வந்தபோது, தம்பட்டி பகுதியில் வைத்து இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
“2011ஆம் ஆண்டில் ரணில் நெடுந்தீவுக்கு வந்த போது, சைக்கிளிலே பயணித்தவர், இன்று அவர் ஜனாதிபதியாக வந்துள்ளார்.
“சிங்கள தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கக்கூடிய திராணியற்றவர்கள். குறிப்பாக சஜித் பிரேமதாஸ, வடக்கு , கிழக்கு இணைந்த ஓர் அரசியல் தீர்வை முன்வைக்கின்றேன் என்று கூற முடியுமா? இல்லை ஜேவிபியின் அனுரகுமார திஸாநாயக்கவால் கூற முடியுமா? வடக்கு, கிழக்கு பிரித்ததும் ஜேவிபிதான். ஆனால், வடக்கு, கிழக்குக்கான ஓர் அரசியல் தீர்வை வைக்க முடியுமா,
“இன வாதத்தை காக்கிக்கொண்டிருக்கும் இவர்கள் போன்ற சிங்கள தலைவர்கள் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை வழங்க முன் வருவார்களா?
“தமிழர்கள் பூர்வீகமாக வாழுகின்ற நெடுந்திவுப் பிரதேசத்தில் அவர்களுடைய கட்சிகளும் தேர்தல் போட்டியிடுகின்றன. அதாவது தமிழ் மக்களினுடைய வாக்குகளை சிதைத்து, அவர்களுடைய பலத்தை இல்லாமல் செய்வதற்கே இவர்கள் இவ்வாறு தேர்தலில் களம் இறக்கப்பட்டிருக்கின்றார்கள்” என்றார்.
You must be logged in to post a comment Login