இலங்கை
யாழில் உணவுப் பொருட்கள் அழிப்பு!


யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனையை முன்னெடுத்தனர்.
குளிர்சாதனப் பெட்டியில் சுகாதார சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.
அத்துடன் உணவகம், ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.