அரசியல்
புலிகள் மீதான தடையை நீக்குங்கள்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என தாம் இந்தியா சென்றிருந்த வேளை கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது. அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் டில்லியில் பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல்வேறுபட்ட கோரிக்கையினை நாங்கள் முன்வைத்திருந்தோம்.
அந்த கோரிக்கைகள் அவரால் செவி சாய்க்கப்பட்டதோடு அதற்கு தீர்வுகள் வழங்கப்படும் என நம்புகின்றோம். மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும், தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக பிரச்சனைகளை ஏற்படுத்தப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும் , கிழக்கு பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தமிழர்களின் காணிகளை அபகரித்து திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை நிறுத்த வேண்டும்.
தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகளது ஜனநாயக வழிமுறைகளை ஏற்று அவர்கள் மீதான தடையினை நீக்க வேண்டும். குறிப்பாக தென்னாசிய பிராந்தியத்தில் முக்கிய வல்லரசான இந்தியா புலிகளின் தடை நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம்.
அத்தோடு தமிழர்களுக்கான ஒரு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கு 87 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலே கொண்டுவரப்பட்ட 13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரினோம் – என்றார்.
You must be logged in to post a comment Login