இலங்கை
சட்டவிரோத கடல் அட்டை பண்ணையால் பாரம்பரிய மீன்பிடி பாதிப்பு!
பாரம்பரியமாக மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபடுவதனால் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது என கிராஞ்சி இலவங்குடா கிராம மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.
கிளிநொச்சி – கிராஞ்சி இலவங்குடா கிராமத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்
குறித்த போராட்டம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
அட்டைப் பண்ணை அமைப்பதற்காக கடற்கரையோரமாக இருக்கின்ற கண்டல் தாவரங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் மீன் பெருக்கம் தடைப்படுவதுடன் பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடல் அட்டை பண்ணை அமைப்பதனால் பெண்தலைமத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டோம்.
விரைவில் இதற்கு நீதி கிடைக்க வேண்டும்.
மனிதஉரிமை ஆணைக்குழுவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்து இருந்தமைக்கு அமைவாக விசாரணைக்கு இன்று வருகை தந்திருந்தோம். இவ் விசாரணையில் நீரியல் வளத்துறை அதிகாரி வருகை தந்திருந்ததுடன் அட்டை பண்ணை அமைப்பதற்கு எந்தவித சிபாரிசும் வழங்கவில்லை என திட்டவட்டமாக கூறி இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
மேலும் தெரிவிக்கையில் தங்களுடைய போராட்டத்திற்கு எந்த அதிகாரிகளும் எங்களுக்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எவ்வித தீர்வையும் பெற்று தரவில்லை என்றும் குற்றச்சாட்டினர்.
You must be logged in to post a comment Login