இலங்கை
வார இறுதியில் கொவிட் தடுப்பூசி விசேட வேலைத்திட்டம்
கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் வார இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மூன்றாவது மற்றும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த வேலைத்திட்டம் இன்று (17ஆம் திகதி), எதிர்வரும் 24ஆம் திகதி, ஒக்டோபர் 1ஆம் மற்றும் ஒக்டோபர் 4ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் நடைபெறவுள்ளது.
20 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களும், 12 முதல் 19 வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களும் எடுக்கப்பட்டதை உறுதிசெய்த பிறகு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும்.
வார நாட்களில் உள்ளூர் வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்படும் வழமையான கொவிட்-19 தடுப்பூசி சேவைக்கு மேலதிகமாக இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2022 ஜூலையில் இறக்குமதி செய்யப்பட்ட பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகளின் காலாவதி திகதியை உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரையின் பேரில் சுகாதார அமைச்சு மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்தது.
அந்த பரிந்துரைக்கமைய., FN 5436, FN 2898, FM 9281 மற்றும் FM 5450 தொகுதியின் கீழ் பெறப்பட்ட பைஸர் தடுப்பூசிகளின் காலாவதி திகதியை ஜூலை 31 முதல் காலாவதியாகும் திகதியிலிருந்து, எதிர்வரும் ஒக்டோர் 31 ஆம் திகதிவரை அமைச்சு அதிகாரப்பூர்வமாக நீடித்துள்ளது.
இலங்கை 2022 ஜனவரிக்குள் 18,000,000 பைஸர் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது, அதில் 11,852,235 தடுப்பூசிகள் செப்டம்பர் 14 க்குள் செலுத்தப்பட்டன. ஏறத்தாழ 6,147,765 தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன.
You must be logged in to post a comment Login