இலங்கை
ஜெனிவாவில் கோள் மூட்டும் எதிர்க்கட்சிகள்!
” ஜெனிவா தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக குரல் கொடுக்காமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவலையடைகின்றது”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன கூறியவை வருமாறு,
” எமது நாடு தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சர்வதேச தளத்தில் உதவிகளை கோராமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே எதிரணிகள் முன்னெடுத்துவருகின்றன.
கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அரசியல் போட்டி ஏற்படலாம். அதனை தேர்தல் காலத்தில் உள்நாட்டில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சர்வதேச தளத்தில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை நாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையை எமது நாட்டு எதிரணிகள் பின்பற்றுவதில்லை.
ஆங்காங் சூகி கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். மியன்மாருக்கு தடைவிதிக்க உலக நாடுகள் முன்வந்தன. ஆனால் நாடுமீது தடைவிதிக்க வேண்டாம், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆங்காங் சூகி நாட்டுக்காக குரல் கொடுத்தார்.
மும்பை தாக்குதலின் பின்னர், இந்தியாவில் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த பிஜேபி தலைவர் சர்வதேசத்திடம் உதவி கோரினார். எமது நாட்டு எதிர்க்கட்சிகளிடம் அந்த சிந்தனை – எண்ணப்பாடு இல்லை. ” – என்றார்.
You must be logged in to post a comment Login