அரசியல்
பழிவாங்கும் படலம் ஆரம்பம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் ஆதரவு அணி உறுப்பினர்களை இலக்கு வைத்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.
இதன்பிரகாரம் டலஸ் அணியில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுக்களில் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் ஆரம்ப கட்டமாக டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொது நிறுவனங்கள் தொடர்பான (கோப்) குழுவின் தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் சரித ஹேரத், இம்முறை பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, நிமல் லான்சா மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் கோப் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோப் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதி அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது.
அத்துடன், டலஸ் அணியில் அங்கம் வகிக்கும் டிலான் பெரேரா மற்றும் பேராசிரியர் நாலக கொடஹேவா ஆகியோர் பொது நிதிக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது டலஸ் அணியில் இடம்பெற்ற, மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரங்கேறும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் சபாநாயகரிடம் முறையிடப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login