இலங்கை
செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 27 ஆரம்பம்!
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஒகஸ்ட் 27ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
செப்டம்பர் 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், செப்டம்பர் 6ம் திகதி கைலாச வாகனமும், செப்டம்பர் 8ம் திகதி சப்பறத் திருவிழாவும், செப்டம்பர் 9ம் காலை 9 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
செப்டம்பர் 10ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் செப்டம்பர் 11ம் திகதி பூக்காரர் பூசையும் நடைபெறவுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலய மகோற்சவ ஏற்பாட்டு கூட்டம், பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டது.
அவையாவன,
- மகோற்சவ காலத்தில் ஆலயச்சூழலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படும்
என்பதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதனை தடுப்பதற்காக ஆலய பிரதான ஆற்றங்கரை பக்கத்தில் இருக்கின்ற பாதையின் ஊடாக முச்சக்கர வண்டிகள் மற்றும்
மோட்டார் சைக்கிள்கள் என்பன வாகன தரிப்பிடத்திற்கு செல்ல முடியும். - இவ்வருடம் நீர்பாசனத் திணைக்கள பாலத்துடனான நடை பாதை போக்குவரத்து இறுதி ஐந்து நாட்களும் இடம்பெறும்.
- ஆலய பூசைகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை முறையாக
பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார நடைமுறைகளின்
கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். - போக்குவரத்துப் பாதைகள் பிரயாணிகள் மாற்றுவழி தடைப்படுத்தப்படும்போது பாதையினை பாவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
- ஆலய தேரோடும் வீதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு மற்றும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியார் காணிகள் கடைகள் ஆலய வீதியில் பக்தி தொடர்பான விடயங்களிற்கே அனுமதிக்கப்படும் என்பதுடன் புதிய கடைகள் மற்றும் வீதீயோர கடைகள் வீதியில் அமைக்கப்படுவதற்கு தடைசெய்யப்படும்.
- ஆலய மகோற்சவ காலத்தில் உணவு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டி இருப்பின் அவ் உரிமையாளர் நாடடின் எப்பாகத்திலாவது உணவு நிலையம் நடாத்திய அனுபவம் இருத்தல் வேண்டும்.
- உணவு நிலையங்களில் உணவினை கையாள்பவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- உணவு நிலையங்களிற்கான குடிநீர் பொது சுகாதார பரிசோதகரினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்து பெறப்பட வேண்டும்.
- கடை உரிமையாளர்கள் ஒவ்வொரு நாளும் முறையாக கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பொருட்களின் விலைநிர்ணயம் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- அடியவர்கள் ஆசாரசீலர்களாக ஆலயத்திற்கு வருகைதருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- பக்தர்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை,
மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி கேட்டுக்கொண்டார்.
You must be logged in to post a comment Login