அரசியல்
முதலீடுகளுக்காக தடை நீக்கவில்லை! – அரசாங்கம் விளக்கம்
புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்த்து இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த பந்துல குணவர்தன,
முதலீடுகளை பெற தடை நீக்கப்பட்டதாக கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
1968 ஆம் ஆண்டின் 45 இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புகள் மீதான தடை அல்லது தடைநீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது. அண்மைய காலங்களில் குறித்த அமைப்புகளின் நடவடிக்கை தொடர்பாக தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னரே இந்த தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமையவே இந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கம் ஆனது பொருளாதார அரசியல் ரீதியாக வீழ்ந்து கிடைக்கும் சிறிலங்காவை மீட்டெடுக்கும் முகமாகவும் புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவில் முதலீடு செய்ய வைக்கும் நோக்கத்துடனும் குறித்த தடையை சிறிலங்கா அரசு நீக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
You must be logged in to post a comment Login