அரசியல்
‘ரணில் கோ ஹோம்’ கோஷத்தால் எந்த பலனும் இல்லை!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.
” எனது வீடு எரிக்கப்பட்டுள்ளது. அதனை மீள் நிர்மாணம் செய்யும்வரை ,’ரணில் கோ ஹோம்’ என கோஷம் எழுப்புவதில் பயன் இருக்காது, முடிந்தால் மக்களை திரட்டிவந்து, வீட்டை நிர்மாணித்து தாருங்கள்.” – என ஜனாதிபதி நகைச்சுவை பாணியில் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.
கண்டிக்கு இன்று (30) பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும் பெற்றார்.
அதன்பின்னர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, இளைஞர்களின் உண்மையான தன்னெழுச்சி போராட்டத்தை, ஒரு சிலர் வன்முறை நோக்கி அழைத்துச்சென்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
” இலங்கை வரலாற்றில் முதன்முதலில் பாசிச தீவிரவாத குழுவொன்றை சந்திக்க நேரிட்டது, வீடுகளை கொளுத்துவதும், புத்தகங்களுக்கு தீ வைப்பதும் ஹிட்லரிடமிருந்து கற்றுக்கொண்டதாகும்.
புலிகள் துப்பாக்கிச்சூடும், குண்டு தாக்குதலும் நடத்தினர். எனினும், முதன்முறையாக பாசிசவாத குழுவை எதிர்கொள்ள நேரிட்டது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீடித்தால் எம்மால் மீண்டெழ முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்நிலையிலிருந்து மீள்வதற்கு நிதியை திரட்ட வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க சர்வக்கட்சி அரசே சிறந்த வழியென.” குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, சர்வக்கட்சி அரசு அமைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை மகாநாயக்க தேரர்களுக்கும் ஜனாதிபதி வழங்கினார்.
You must be logged in to post a comment Login