அரசியல்
நாடளாவிய ரீதியில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தம்!
பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகும் வரையிலும், நாடு முழுவதும் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் நிர்வாக முடக்க போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தன. அதற்கமைய இன்று முதல் இந்த போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் நேற்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளன.கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க இல்லாத இடைக்கால அரசாங்கத்தை நாடாளுமன்றம் கூட்டி நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட நிர்வாக முடக்கம், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை விட முற்போக்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் அனுப நந்துல தெரிவித்துள்ளார்.
அதேவேளை அடுத்த சில நாட்களில் பொது மற்றும் தனியார் துறை பணியிடங்களில் இந்த கூட்டு தொழில்முறை நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஆதரவைப் பெறுவோம் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு தலையிட்ட நாடாளுமன்ற அமைப்பை உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், நாட்டு மக்களுடன் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்கள் இணைந்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு கூறியுள்ளதாகவும், எனினும் மக்கள் விருப்பத்திற்கு செவிசாய்க்க அவர்கள் தயாரில்லை என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login