இலங்கை
கிளிநொச்சியில் மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம்!
கிளிநொச்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று அதிகாலை முதல் காத்திருந்த மக்கள் ஏ – 9 வீதியை மறித்துப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தினமும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று கிளிநொச்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள நிலையில் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தபோதும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை.
இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை ஏ – 9 வீதியின் குறுக்காக வைத்து வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிளிநொச்சிப் பொலிஸார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது.
You must be logged in to post a comment Login