அரசியல்
IMF கடன் திட்டம் ஜூனில் அமுலாகும்! – ரணில் நம்பிக்கை
“இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில்தான் பிரதமர் பதவியை நான் ஏற்றேன். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதப் நடுப்பகுதியில் அமுலாகும் என எதிர்பார்க்கின்றேன்.”
– இவ்வாறு பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர், இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இயலுமானவரை செலவினத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வருடத்துக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற எதிர்ப்பார்க்கின்றோம்.
அதேநேரம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளினதும் உதவிகள் பெறப்படவுள்ளன.
கிடைக்கப்பெறும் உதவிகளில், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், நாட்டின் பணவீக்கமானது 40 சதவீதம் வரை அதிகரிக்கும்.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு வரை ஒரு சதவீத ஆரம்ப மிகை நிலுவையை அடைவதை இலக்காக நிர்ணயித்துள்ளேன்” – என்றார்.
You must be logged in to post a comment Login