அரசியல்
முதுகில் ஏறி அரசியல் சவாரி! – 11 கட்சிகளின் கூட்டணி தொடர்பில் அவதானம் தேவை என்கிறார் ராஜித
“11 கட்சிகளின் கூட்டணி எங்கள் முதுகில் அரசியல் சவாரி செய்ய முயல்கின்றது. அந்த பொறிக்குள் நாம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலைமை மிக நிதானமாக கையாள வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ராஜித சேனாரத்ன.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. சஜித் பிரேமதாச உட்பட கட்சி பிரமுகர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நம்பிக்கையில்லாப் பிரேரணை, இடைக்கால அரசு யோசனை பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், இடைக்கால அரசுக்குள் சுயாதீன அணிகள் நுழைந்துவிடும். எனவே, காத்திருந்து காய்நகர்த்துவோம் என இதன்போது பிரேரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அங்கம் வகிக்கும் அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால், அது எதிர்கால அரசியலுக்கு சிக்கலா அமைந்துவிடும். எனவே, வெளியில் இருந்துகொண்டு தேவையான ஆதரவை – ஒத்துழைப்பை வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னரே, இடைக்கால அரசை நிராகரிக்கும் வகையில் சஜித் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுவருகின்றார்.
விமல், கம்மன்பில உள்ளிட்ட 11 கட்சிகளில் உள்ளவர்கள், எந்நேரத்திலும் காலை வாரலாம். அவர்கள் குறித்து விழிப்பாகவே இருக்க வேண்டும் என ராஜித சேனாரத்ன மேற்படி சந்திப்பின்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment Login