இலங்கை
மேலும் ஒரு மண்ணெண்ணெய் வரிசை மரணம்
வீட்டுத் தேவைக்கு , மண்ணெண்ணெய் வாங்குவதற்காக 5 மணிநேரத்துக்கு மேல் வரிசையில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
ஹட்டன், தும்புறுகிரிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26) மாலை 5 மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று, இரவு 11 மணியளவிலேயே வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிக களைப்பாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளார். அதன்பின்னர் நித்திரைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login