இலங்கை
தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி! – சட்டமூலம் நிறைவேற்றம்
கடும் அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (07.04.2022) திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடாந்தம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரேதடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது மிகைவரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டது. எதிரணிகள் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பில் இருந்து தமது கட்சி விலகி நிற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட முக்கிய நிதியங்கள் இதில் உள்ளக்கடப்படவில்லை. அதற்காகவே நாம் போராடினோம் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் குழுநிலையின்போது திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. திருத்தங்கள் சகிதம் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இன்றைய தினம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவில்லை. பிரிதொரு நாளில் நடத்தப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login