அரசியல்
முடிவில் மாற்றமில்லை! – சுதந்திரக்கட்சி விடாப்பிடி
அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் சபையில் அறிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியை சந்திப்பதால் அக்கட்சியின் முடிவு மாறக்கூடும் என்ற தகவல் வெளியானது. எனினும், மேற்படி முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என சந்திப்பின் பின்னர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அவசரகால சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்துள்ளன.
You must be logged in to post a comment Login