அரசியல்
தனிநபர் முடிவுகளுக்கு இடமில்லை! – கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் என்கிறார் ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஜனநாயகமிக்க அமைப்பாகும். எனவே, தனிநபர் முடிவுகளுக்கு அப்பால் கட்சியாக கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இளம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இருந்தபோது தனிநபராக முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் கட்சிக்கென மூத்த சட்டத்தரணிகள் உள்ளனர், போஷகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடி – கட்சியாகவே இனி முடிவுகள் எடுக்கப்படும்.
அரசியல் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு யாப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகாரங்கள் உரியவகையில் பகிரப்பட்டுள்ளன. இளைஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தேசிய சபைக்கு கணக்கு, வழக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் அரசியல் செய்தாலும் தொழிங்சங்கம்தான் பிரதானமானது. ஏனைய தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கம் என்ற போர்வையில் அரசியலையே செய்கின்றன. முடித்தால் கணக்கு வழக்கை காட்டட்டும்.” – என்றார்.
You must be logged in to post a comment Login