அரசியல்
பிரச்சினைகள் பற்றி ஆராயவே கூடியுள்ளோம்! – மாநாட்டில் சீறிய ரணில்
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி கதைக்க முடியாது. இறுதியில் விஜய மன்னர் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை இருந்திருக்காது என்ற முடிவுக்குதான் வரவேண்டியிருக்கும்.”
இவ்வாறு சர்வக்கட்சி மாநாட்டில் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிமரசிங்க.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
” நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல. எனினும், குறுகிய அரசியல் நோக்கில், தற்போதைய நிலைமைக்கு கடந்த அரசுதான் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார். அதற்கு என்னாலும் பதில் வழங்க முடியும். பிறகு அவர் கருத்து வெளியிடுவார். அதற்கு நான் பதில் வழங்குவேன். அப்படியானால் இந்த பிரச்சினையை பற்றி மட்டும்தான் பேச வேண்டியிருக்கும்.
இறுதியில் விஜய மன்னன் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்ற முடிவுக்கும் வரக்கூடும். அதேபோல எதிரணிகளை தோற்கடிக்க நாம் இங்குவரவில்லை. எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்ளும் நோக்கில்தான் வந்துள்ளோம்.” – என்றார் ரணில்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
” மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு உங்களுக்கு ஏதேனும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். கடந்த கால நிலைவரம் பற்றியே அவர் கூறவிளைந்துள்ளார்.” – என்றார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பிலும் ரணில் இதன்போது கருத்து வெளியிட்டார். நிதி அமைச்சருடன் இது பற்றி விளக்கம் கோரினார்.
அறிக்கை எமக்கு கிடைக்கவில்லை. வரைவு நகல்தான் கிடைத்துள்ளது. அதன வழங்கமுடியாது என பஸில் பதிலளித்தார்.
You must be logged in to post a comment Login