அரசியல்
IMF அறிக்கை இதுவரை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை! – ரணில் தெரிவிப்பு
” இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு நாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அந்த அறிக்கை இன்னும் முன்வைக்கப்படவில்லை. இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையாகும்.
ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. அறிக்கை கிடைத்திருந்தால் பேச்சு நடத்துவதற்கு அது சிறப்பாக இருந்திருக்கும்.
எனவே, அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்தல் விடுக்கப்பட வேண்டும்.” – என்றார் .
” சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இலங்கையிடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்படவில்லை. அவ்வாறு கையளிக்கப்பட்டதும், அது பகிரங்கப்படுத்தப்படும்.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் பதில் வழங்கினார்.
You must be logged in to post a comment Login