அரசியல்
காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய தவிசாளர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச சென்ற நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்துக்காகவே இவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு குறித்த தவிசாளர்கள் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ். விஜயத்தின் போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மட்டுவில் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
அங்கு வருகைதந்தோரை பொலிஸாரும் இராணுவத்தினரும் கடுமையாக தாக்குவதை அறிந்து அப் பகுதிக்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினருடன் இணைந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் பொருளாதார மத்திய நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு பதாதைகள் எரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிஸாரினால் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login