அரசியல்
கோட்டாவின் சர்வகட்சி மாநாடு: சஜித் அணியும் புறக்கணிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கின்றது.
இந்தத் தகவலை கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதா அல்லது அதைப் புறக்கணிப்பதா என்பது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எடுப்பதற்காகக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று முற்பகல் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது பெரும்பான்மையான உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிப்பது என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
“கோட்டாபயவின் சர்வகட்சி மாநாடு வெறும் ஊடகக் கண்காட்சி. பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான நோக்கம் அரசிடம் இல்லை. நாம் ஏன் மாநாட்டைப் புறக்கணித்தோம் என்பது குறித்த விரிவான ஓர் அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் கூறினார்.
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என ஜே.வி.பியினரும் மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login