அரசியல்
யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மஹிந்தவால் திறப்பு
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. மட்டுவில் நகருக்கு இன்று வருகை தந்த பிரதமர், யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து நினைவுப் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்குப் பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ். சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
இன்றைய திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் தர்ஷன படிகோரள, யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் என்.உஷா மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment Login