அரசியல்
ஜனாதிபதி செயலகம் மீண்டும் முற்றுகை! – கொழும்பில் பதற்றம்
‘நாட்டின் எரிபொருள் வரிசையை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் சோசலிச இளைஞர் முன்னணி இன்று முற்பகல் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதியில் ஜனாதிபதி செயலகத்தையும் முற்றுகையிட்டுக் கோஷம் எழுப்பினர்.
நாட்டின் எரிபொருள் வரிசையை முடிவுக்குக் கொண்டு வருவோம், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட யுகதனவி ஆகியவற்றை மீளப் பெறுவோம் உள்ளிட்ட கோரிக்கைககளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதற்கமைய தொழிநுட்பக் கல்லூரி சந்தி, மருதானை முதல் கோட்டை வரையிலான வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
அத்துடன், தொழிநுட்பக் கல்லூரி சந்தி முதல் காலிமுகத்திடல் வரை நடைபவனியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்குள் உள்நுழைய முற்பட்ட நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login