இலங்கை
நீதி கிடைக்கும்! – சம்பந்தன் அதீத நம்பிக்கை
“இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இன்னமும் தளர்ந்துபோகவில்லை.”
-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும் அந்த நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய, ‘இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பிலான அறிக்கையின் முதற்பிரதி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விபரீதம் உள்ளிட்ட தமிழர் நலன்சார் பல விடயங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நாம் அறிக்கையூடாக வெளியிடவுள்ளோம்” – என்றார்.
You must be logged in to post a comment Login