இலங்கை
இராமேஸ்வர மீனவர்களைத் தாக்கிய செய்தி உண்மைக்குப் புறம்பானது!
இலங்கை கடற்படை சில தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்களை தாக்கியதாக வெளியான செய்தியானது முற்றிலும் பொய்யானது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கங்களின் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (21) காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
இந்த செய்தியை யாழ்ப்பாணத்திலுள்ள சில பத்திரிகைகளும் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளமை வேதனையளிக்கின்றது.
எமது நாட்டு கடற்படை தாக்கியதாக இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வந்தவுடன், அதை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் உடனடியாக வெளியிடுகின்றன.
ஆனால் எமது போராட்டத்தின் உண்மைகளை வெளியிடுவதில் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அந்தவகையில் எமது ஊடகவியலாளர்களிடம் நாம் கோருவது உண்மையான செய்திகளை அறிந்து அதை உண்மைத் தன்மையுடன் வெளியிட வேண்டும் என்பதே.
இதேவேளை நாம் கடந்த 10 வருடங்களாக சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்களால் பலகோடி சொத்துக்களையும் பொருளாதார வளங்களையும், இழந்து தவிக்கின்றோம்.
எமது அரசாங்கத்திடமும் கடற்படையினரிடமும் இதை நிறுத்துமாறு கோரி நாம் நாளாந்தம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால் எமது போராட்டத்தின் உண்மை நிலையை இந்திய ஊடகவியலாளர்களுக்கு இங்குள்ள ஊடகவியலானர்கள் எவ்வாறு கொண்டு சேர்கின்றீர்கள் என்பதே கேள்வியாக உள்ளது.
ஆனால் இந்தியாவில் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி வெளியடப்பட்டால் அதை உடனடியாக முன்னுரிமை கொடுத்து இங்கு வெளியிடுகின்றீர்கள்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும், சட்டவிரோத இந்திய மீனவர்களை கைது செய்வதற்கும், கைது செய்யப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் பறிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login