இலங்கை
பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதே டக்ளஸின் வேலை!!
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் இவ்வாறு கூறியுள்ளார்.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் – மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியாவின் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக ஆக்கிரமித்துள்ளன. ஏறத்தாழ 35 வருடங்கள் எங்களது கடலை வாரிச் செல்கிறார்கள். கடல் வளங்களையும் அழித்து விடுகிறார்கள்.
பொருளாதாரத்தை அழிக்கிறார்கள். அத்துடன் வலைகளையும் அழித்து நாசம் செய்கின்றார்கள். இதனால் பலதரப்பட்ட போராட்டங்களையும் நாம் முன்னெடுத்திருந்தோம். மேலும் பல அறிக்கைகள் கூட பிரமுகர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்று வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கவில்லை.
மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, தற்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்த வருகை தந்து, அதற்கான சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கினார். ஆனால் இப்படி கூறுவதே அவரது வாடிக்கையாக உள்ளது.
கடந்த காலங்களிலும் கடற்றொழில் அமைச்சர் எதுவும் செய்யவில்லை. தற்போதும் எதுவும் செய்யவில்லை. இனிவரப்போகும் காலங்களிலும் அவர் எதனையும் செய்யப்போவதுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login