இலங்கை
பகிடிவதையில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவன் அதிரடியாக வெளியேற்றம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது, விஞ்ஞான பீட மாணவன் ஒருவர் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிந்து – மறு அறிவித்தல் விடுக்கும் வரை, குற்றஞ்சாட்டப்பட்ட மாணவன் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதிக்கும் உள் நுழைய முடியாது என தடையுத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உடனடியாக குறித்த மாணவனை விடுதியில் இருந்து வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலையின் விஞ்ஞான பீடாதிபதியால், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவனுக்கே இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில், பல்கலையின் புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் எனவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர் நலச்சேவை அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரை விடுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login