இலங்கை
விபத்தில் உயிரிழந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்!
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்
நேற்று (03) இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் பதில் நீதிவான் ஒருவருடைய கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சடுதியாக காரின் கதவு திறக்கப்பட்டுள்ளது.
அந்நேரம் அந்த வீதியால் பயணித்த ஆசிரியர் காரின் கதவு மீது மோதி வீதியில் விழுந்துள்ளார். அதன்போது, பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது.
இச்சம்பவத்தினால், குறித்த ஆசிரியர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை விபத்து இடம்பெற்றவுடன், காயமடைந்த ஆசிரியரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயிரிழந்த ஆசிரியரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேவேளை, குறித்த பதில் நீதவானும், அவரது சாரதியும் இன்றைய தினமே பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பதில் நீதவானின் சாரதியும், பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login