இலங்கை
அரசியல் தெரியாதவர்களின் விமர்சனங்கள் தேவையில்லை- தயாசிறி
கூட்டணி அரசியல் கோட்பாடு தொடர்பில் தெளிவில்லாதவர்களால், முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளமாட்டோம்.
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார்.
அரச தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் சொற்கணைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த அரசுடன் பேச்சு நடத்தியது, ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
பேச்சுகளில் ஈடுபட்ட, ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட தலைவர்களின் கருத்துகள்தான் எமக்கு முக்கியம். அரசியல் தெரியாதவர்கள், கூட்டணி தொடர்பில் தெளிவில்லாதவர்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் எமக்கு அவசியமில்லை. அவை தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
அதேவேளை, உரத்துக்கான நஷ்டஈட்டை பொறுப்புக்கூறவேண்டியவர்களே வழங்க வேண்டும்.” எனவும் தயாசிறி குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login