இலங்கை
மன்னாரில் பதற்றம் – மீனவர்கள் மீது கடற்படையினர் அட்டகாசம்
மன்னார் பேசாலை பகுயிலுள்ள வங்காளைபாடு கடற்பகுதியில் மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராமசேவையாளர் உட்பட பலரை வங்காளைபாடு கடற்படையினர் மதுபோதையில் வந்து காரணம் இன்றி கடுமையாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பலத்த காயங்களுக்கு உள்ளாகிய கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தெரிய வருவதாவது
நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை சிவில் உடையில் வந்த இரு கடற்படையினர் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடற்கரைக்குச் சென்ற தனது தந்தையைக் காணவில்லை என கிராம அலுவலரான மகன் அப்பகுதிக்குச் சென்று மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் அந்தப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவமுற்ற கடற்படையினர் அருகில் உள்ள முகாம் சென்று மேலும் 10 கடற்படையினரை அழைத்து வந்து அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரை தாக்கியுள்ளனர்.
அத்துடன் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட கிராமசேவையாளர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோது முறைப்பாட்டை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதனை வன்மையாகக் கண்டிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் இந்த அராஜகமானது தற்போது இருக்கும் அரசின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் தலைமையகத்தில் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் மீனவர்கள் தரப்பு மற்றும் தாக்கியதாக கூறப்படும் கடற்படையினர் ஆகியோரை விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனையும் அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login