இலங்கை
கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம்
கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்?
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளரிடம் கூறியுள்ளார்.
இறுதிப்போரின் போது ஓமந்தையில் வைத்து தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதா?
அவ்வாறெனின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனரா? ஒப்படைக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என உறுதியளித்தவர்கள் தற்போது இழப்பீட்டு தொகையை பரிந்துரை செய்கின்றனர்.
ஒப்படைக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என அவர்களது உறவுகள் காத்திருக்கிறார்கள்.
உள்ளகப் பிரச்சினை தொடர்பில் ஆராய உள்ளக விசாரணைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் எனவும் அரசு கூறுகிறது. கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா?
உள்ளக விசாரணையை நாம் ஏற்கமாட்டோம். நாங்கள் சுயாதீனமான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய நேர்த்தியான சர்வதேச விசாரணையையே கேட்கிறோம்.
கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலை சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து அவர்களை சுட்டுக் கொள்வேன் என தனது சப்பாத்துக்களை நக்க சொல்லியுள்ளார். அத்துடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.
சாதாரண ஒருவரிடத்தில், துப்பாக்கி அல்லது வெடிபொருள்கள் இருந்து கைப்பற்றப்பட்டால் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், லொஹானின் விவகாரத்தில் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை.
அவரிடமிருக்கும் சகல அதிகாரங்களை பறித்து, அவரை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால் அவ்வாறு நீதி வழங்கப்படவில்லை. இந்த கொலை அச்சுறுத்தல் சம்பவமானது தற்போதைய அரசின் ஏதேச்சதிகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை வரலாற்றில் சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் அனுசரணையில் ஏராளமான படுகொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடூரமான சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன.
எனவே உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இது தொடர்பில் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login